Kollywood reacts for Delhi Gangrape case:

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் – கோலிவுட் ரியாக்ஷன்:

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர். இதுபற்றி கோலிவுட் ஹீரோ, ஹீரோயின்கள் கூறியதாவது:

சூர்யா: நீதி தூங்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.

மாதவன்: இந்த சம்பவம் பற்றி நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும். அதை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும். பொது இடத்தில் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்.

நயன்தாரா: இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. மொட்டிலேயே ஒரு பெண் வாழ்வு சீரழிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமானவனை சும்மா விடக்கூடாது. அவன் மீது அரசு இரக்கம் காட்டக்கூடாது. காரில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்தால் அதை தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். பலாத்கார செயலில் ஈடுபடும் கொடுமைக்காரர்களை தண்டிக்கும் வகையில் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். இதற்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோல் கொடுமை நடக்காது.

ஹன்சிகா: அதிர்ச்சி தரும் சம்பவம் இது. இதற்காக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த கொடுமையை செய்தவனை தயவுதாட்சண்யம் பார்க்காமல் தூக்கிலிட வேண்டும்.

ஸ்ருதிஹாசன்: இந்த சம்பவத்துக்கு நீதிவிசாரணை வைக்க வேண்டும். ஒரு பெண்ணாக இந்த சமூகத்தின் மீது எனக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. கடுமையான தண்டனைதான் தீர்வுக்கு ஒரே வழி.