விவசாயிகளுக்காக திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அழைப்பு

party

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“வரலாறு காணாத வறட்சியாலும், வங்கிக் கடன் தொல்லையாலும் இன்றைக்கு தமிழக விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது என்றால், “அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள்” என்று சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியிருக்கும் ‘குதிரை பேர’ அதிமுக அரசின் விவசாயிகள் விரோத செயலைப் பார்த்து ஏழரைக் கோடி இதயங்கள் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில் விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்வது, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள முழு தொகையையும் வழங்குவது, காவேரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 16ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் மாவட்ட தலைநகரங்களில் தவறாமல் பங்கேற்று, ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கிறது என்ற உணர்வினை மத்திய – மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்துமாறு அனைத்து கழக மாவட்ட செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொள்கிறது. பா.ஜ.க., அதிமுக போராட்டத்தில் கலந்து கொள்ளாது.

Leave a Response