வருகின்ற ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி காரைக்காலில் வேகம் எடுத்துள்ளது. இங்கு தயாராகும் விதவிதமான பிள்ளையார் சிலைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில் ஜல்லிக்கட்டு பிள்ளையார், பாகுபலி விநாயகர் உள்ளிட்ட அசத்தலான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டின் புதுவரவான ஜல்லிக்கட்டு மற்றும் பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகளில் வீரசிவாஜி மற்றும் ஜான்சி ராணியும் அடங்குவர். 3 – 15 அடி உயரம் வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிலைகள் உருவாக்கப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது மாசு படாமல் இருக்க ரசாயன கலவையின்றி தயாரிப்பதாகவும் கூறுகின்றனர். சிலை செய்யும் பணியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியால் 3 மாத காலத்திற்கு இடைவிடாது வேலை கிடைப்பதாக, சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.