கமல்ஹாசன் எப்போதோ அரசியலுக்கு வந்தாச்சு!

kamal2
‘இது கமல் வாரம்’ என்று சொல்லும்படியாக டிவிட்டர், அறிக்கை என உலகநாயகன் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று மாலை அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தீயின் உக்கிரம் இருந்தது. அந்த அறிக்கைதான் இன்றைய சில தினசரி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும் இருக்கிறது!

கமல்ஹாசன் சமீபமாக பேசி வருகிற அரசியல் சார்ந்த கருத்துகள், அவரது அறிக்கைகள், டிவிட்டுகள் எல்லாம் அவர் அரசியலை நோக்கி நகர்கிறாரோ என்ற நினைப்பையே ஏற்படுத்துகிறது.

‘‘போற போக்கைப் பார்த்தால் சூப்பர் ஸ்டாருக்கு முன்னேயே இவரு வந்துடுவாரு போலிருக்கேப்பா என பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்!

ஆனால், கமலோ ‘நான் என்னுடைய சின்ன வயதில் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக நின்றபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என விளக்கம் தருகிறார். அவர் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது!

2011 தேர்தலின் போது, ‘‘எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்று பார்த்துதான் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும்’’ என்று சொல்லியிருந்தார்!

ஜெயலலிதா ஆட்சியில் இரவோடு இரவாக கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அன்றைய தினமே பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ‘‘மூன்று முறை முதல்வராக இருந்த ஒரு பெரிய மனிதருக்கு சட்டப்படி அவருக்கு இருக்கும் உரிமையின்படி தனது கருத்தைச் சொல்வதற்கும், பேசுவதற்கும்கூட வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு விரோதமானது’’ என்றார்!

பத்து வருடங்களுக்கு முன்பு, ‘‘அவருக்கு இவர் பரவாயில்லை. இவருக்கு அவர் பரவாயில்லை என்பது போலத்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது’’ என்று தன் கருத்தை தெரிவித்திருந்தார்!

2015_ம் வருடம் பெருவெள்ளம் வந்து சென்னை மூழ்கியபோது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு கடைப்பிடித்த மெத்தனப் போக்கை விமர்சித்தார் கமல். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து கமலுக்கு கண்டன அறிக்கையொன்று வந்தது. அப்போது, ‘‘ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் பொருட்டு எங்கெங்கு தவறுகள் நடந்ததோ அங்கிருந்தெல்லாம் ஆட்சி மேலிடத்திற்கு அந்தந்த தகவல்களை நாகரிகமான முறையில் அனுப்புங்கள்’’ என மக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்! அதை முறையில்தான் கமலின் நேற்றைய அறிக்கையும் அமைந்திருக்கிறது.

என்னவொன்று நேற்றைய அறிக்கையில் காரம் கொஞ்சம் தூக்கல்!!

ஆகக்கூடி, கமல்ஹாசன் கட்சி துவங்கி தேர்தல் களத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டார்தான்!
__________________
கமல்ஹாசன் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை இதோ…

வணக்கம்.
இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல.
அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.
ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.
ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.
நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளிவீசுபவர்கள்… ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்,…என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.
ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது.
ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?
இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே. நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.
தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ! பொறுத்துதான் பார்க்கவேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.
நிற்க… செய்தி சரியாகப் புரியாதவங்களுக்குஞ்
“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”
எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல் துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும். மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள். விரைவில் அது கேட்கும். தெளிவாக

உங்கள்
– கமல் ஹாசன்.
அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி

Leave a Response