திடீர் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்கள்…

dinakaran-new-26-1493200517
தற்போது அ.தி.மு.கவில் மூன்று அணிகளாக செயல் படுகின்றனர். முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், தற்போது முதல்வராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஓர் அணியாகவும் அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள்.

தினகரன் அணியில் இருப்பவர்கள் சமீபகாலம் வரை எடப்பாடி பழனிசாமி அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வந்தனர். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான தினகரன் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியோ மற்ற முக்கிய அமைச்சர்களோ அவரை சந்திக்கவில்லை.

இதனால் தினகரன் புறக்கணிக்கப்படுகிறார் என்று உணர்ந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் அவரது பக்கம் சாய்ந்து. அவர்கள் எல்லோரும் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

பரபரப்பாக நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடருக்கு இடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினார்கள். அதாவது, தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், ஐ.எஸ்.இன்பதுரை, செந்தில் பாலாஜி, ஜக்கையன், வெற்றிவேல் உள்பட சுமார் 25 பேர் சென்று இருந்தனர்.

இந்த பேச்சு வார்த்தை மாலை 4:30 மணிக்கு துவங்கி ஒரு மணிநேரம் நீடித்தது. பேச்சுவார்த்தையில் கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொண்டனர். அத்துடன் அவர்கள் கீழே உள்ள சில நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.

* கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

* ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கட்சியை டி.டி.வி.தினகரன் கவனித்துக்கொள்வார்.

* எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கட்சி சார்பில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும். அரசு சார்பில் உங்கள் தலைமையில் நடைபெறட்டும்.

* கட்சி அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் தினமும் வந்து கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்வார்.

* அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இப்தார் விருந்தை டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி நடத்துவார்.

* ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் ஒருமித்து வாக்களிப்போம்.

* எல்லாவற்றிற்கும் மேலாக டி.டி.வி.தினகரனுக்கு நீங்கள் அழைப்பு விடுக்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விதித்தனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளிடம் கலந்துபேசி தனது முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நிபந்தனைகளை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response