தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளிப்பதால், சுற்றுலா சிறப்பு பட்டியலிலிருந்து ஒகேனக்கல் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது , ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு சுற்றுலா பட்டியல் ஒன்று தயாரிக்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஒகேனக்கல் பகுதி காவிரி ஆறு தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவி பகுதியில், வெறும் பாறைகள் மட்டுமே தெரிகின்றன. இதனால் இந்த ஆண்டிற்கான சுற்றுலா சிறப்பு பட்டியலிலிருந்து ஒகேனக்கல் பகுதியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீக்கியுள்ளது.
எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கக்கூடிய ஒகேனக்கல் பகுதி, தற்போது வறட்சி காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் நடத்தி வந்தவர்களும், பரிசல் ஓட்டிகளும் வேலையில்லாமல் உள்ளனர்.