யாருக்கு இரட்டை இலை சின்னம் என்று 22-ந்தேதி தெரியும் முடிவு

admk-logo
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவு அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

இரு அணியினரும் தற்போது அ.தி.மு.க.வின் செல்வாக்கு மிக்க தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் நேருக்கு நேராக முதல் முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றனர். அவர்களுக்கு இரட்டை இலை சின்னம்தான் பலம் பொருந்தியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறதோ அந்த அணிக்கு நிச்சயம் கூடுதல் வாக்குகள் கிடைக்கும்.

இதை கருத்தில் கொண்டு இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 20-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதையடுத்து சசிகலா தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். அவர்கள் 21-ந் தேதி மாலை வரை பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுவதால் அதை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதில் தேர்தல் ஆணையத்திடம் தவிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் முழுமையான தெளிவு பெறுவதற்காக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் வருகிற 22-ந்தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்று இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எழுந்துள்ள மோதலால் அது யாருக்கும் கிடைக்கும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எத்தகைய விசாரணை நடத்தும்? எத்தகைய அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு மேற்கொள்ளும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சசிகலா தரப்புக்கும், ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டுள்ளோம். இரு தரப்பினரிடமும் புதன்கிழமை (22-ந்தேதி) காலை விசாரணை நடத்தப்படும். இரு தரப்பினரும் சொல்லும் கருத்துக்கள் கனிவோடு கேட்கப்படும்.

அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சட்ட ரீதிக்கு உட்பட்டதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு அன்று மாலையே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சசிகலா தரப்பினர் தங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பெரும்பான்மை பலம் இருப்பதை சாதகமாக சொல்லி இரட்டை இலையை கேட்டு வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.

அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை சுட்டிக்காட்ட முடிவு செய்துள்ளனர். சசிகலா தேர்வு செல்லாது என்பதற்கான ஆதாரங்களையும் கொடுக்க உள்ளனர். அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர். இரு தரப்பினரும் சட்ட விதிக்கு உட்பட்டு ஆதாரங்களை அளிக்க இருப்பதால் உடனடியாக இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க இயலுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் கொடுக்காமல் முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அப்படி தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனும், மதுசூதனனும் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடும் நிலை ஏற்படும்.

Leave a Response