விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
ஹரி இயக்கத்தில் உருவான ‘சி 3’ படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என பெயரிட்டார்கள்.
இப்படத்தின் பூஜையுடன் நவமபர் 2, 2016 முதல் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்புக்காக மதுரையில் பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தினார்கள். மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன், “இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளோம். அனிருத் கொடுத்த ஒரு அற்புதமான பாடலை படமாக்கி முடித்துள்ளோம். விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.
மேலும், நடிகர் செந்திலுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்தது. அவர் நடித்த பழைய படங்களின் காட்சிகள் எப்படி உருவானது என்பதை தெரிந்து கொண்டேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.