காலால் +2 தேர்வை எழுதிய மாணவன்; பிரமிப்புடன் பார்க்கும் கண்காணிப்பாளர்

panni
தக்கலை அரசு பள்ளியில் பிளஸ்-2 தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவரை, வாய் பிளந்தபடி கண்காணிப்பாளர்கள் வெறித்துப் பார்த்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை கல்குளம் சரல்விளை பகுதியை சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் பிளஸ்சிங் சஜூ (17) எழுதினார். அதனை சக மாணவர்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர். தேர்வுக்கான நேரம் தொடங்கியதும் மாணவர் பிளஸ்சிங் சஜூவுக்கு தேர்வு அறையின் கண்காணிப்பாளர் வினாத்தாளை கொடுத்தார். அதை வாங்கிய மாணவர் பிளஸ்சிங் சஜூ, விடைத்தாளில் கைகளுக்கு பதில் காலால் எழுத தொடங்கினார்.
காலில் எழுதினாலும் அவர் எழுதிய வேகம் கைகளால் எழுதுபவரை அதிகம்.

இந்த நேரத்தில் தேர்வு அறைக்கு முதன்மை கண்காணிப்பாளர் ஐரனேஷ் குமார் வந்தார். அவர் மாணவர் பிளஸ்சிங் சஜூ காலால் தேர்வு எழுதுவதைப் பார்த்து அவரைப் பாராட்டினார்.
வழக்கமாக இரு கைகளையும் இழந்தவர்கள் பொது தேர்வு நேரத்தில் உதவியாளர் மூலம் தேர்வு எழுதுவதுண்டு. ஆனால் மாணவர் பிளஸ்சிங் சஜூ உதவியாளர் இல்லாமல் அவரே காலால் தேர்வு எழுதியது, அவரின் இமாலய தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று கூறினார்.
மாணவர் பிளஸ்சிங் சஜூவின் தந்தை எலியாஸ். கூலிதொழிலாளியான இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். பிளஸ்சிங் சஜூ 4 -வது மகன். பிறக்கும்போது இரண்டு கைகளும் இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்தார்.

இதற்காக அவர் மனம் வருந்தவில்லை. கைகளால் செய்ய வேண்டிய பணிகளை கால்களால் செய்ய பழகி கொண்டார்.பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் இவரும் பள்ளிக்கு சென்றார். அங்கு பாடங்களை கைகளால் எழுதுவதற்கு பதில் காலால் எழுத பழகிக் கொண்டார்.
10-ம் வகுப்பு தேர்வு நடந்த போதும் காலால் தேர்வு எழுதி 386 மதிப்பெண் எடுத்தார். இப்போது பிளஸ்-2 தேர்வு எழுதி வருகிறார். இந்த தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பேன் என்று மாணவர் பிளஸ்சிங் சஜூ நம்பிக்கையுடன் உள்ளார்.

Leave a Response