நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவாகவுள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்க உள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யவடு சுப்பிரமணியம்’ படத்தின் இயக்குநர்.
இதில் சாவித்திரி வேடத்தில் நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் சாவித்திரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ‘மகாநதி’ என்று இப்படத்துக்கு பெயரிட்டுள்ளார்கள்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா. மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. விஜயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.