விஜய் 59 படத்தின் தலைப்பு எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் படத்தின் பெயர் ‘தெறி’ என அறிவிக்கப்பட்டது. இந்த தலைப்பு வெளியான உடன், வேதாளம் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என ஒரு குழுவும், கத்தி படத்தின் போஸ்டரிலேயே தெறி என்ற வார்த்தை இடம் பெற்றதாக ஒரு குழுவும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் அந்த டைட்டில் விஜய்க்கும் இல்லை, அஜித்திற்கும் இல்லை, அனிருத்திற்கும் இல்லை எனக்கு தான் சொந்தம் என்கிற அளவில் புதுமுக இயக்குனர் ஒருவர் களத்தில் குதித்தார். தெறி என்ற டைட்டிலை மூன்று மாதத்திற்கு முன்னரே பதிவு செய்துவிட்டதாகவும், என்னிடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அவர்கள் படத்திற்கு தலைப்பை சூட்டியுள்ளதாக புதுமுக இயக்குனர் சதீஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து ஏற்கனவே ஒற்றன் செய்தி இணையத்தில் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டோம்.
தற்பொழுது இயக்குனர் சதீஷ்-யை மொபைலில் தொடர்புகொண்டு பேசியபோது, அவருக்கு பதிலாக அவருடைய மேனஜர் நித்தியானந்தம் பேசினார். தெறி படத்தின் இயக்குனர் சதிஷ்குமார் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்சுவாமி ஆகிய இருவருக்கும் நான் தான் மேனஜர். டைட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதரங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். இன்னும் சில தினங்களில், அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் எல்லா ஆதாரத்தையும் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டரீதியாக டைட்டிலை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் டைட்டிலை ரெஜிஸ்டர் செய்த ரசிதின் காப்பி கீழே இணைக்கப்பட்டுள்ளது.