கேள்விக்குறியை ஆச்சர்யக்குறியாக்கிய ஜெய்லானி..!

கன்னடத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் லூசியா. இந்தப்படம் தயாரான விதமும் கூட சுவராஸ்யமானதுதான். அதாவது பேஸ்புக் மூலமாக தனது கதை இதுதான் என்றும், இதனை படமாக்க நிதி உதவி செய்யும் பார்ட்னர்கள் வேண்டும் என படத்தின் இயக்குனர் அறிவிப்பு கொடுக்க, பலர் பங்குதாரர்களாக சேர்ந்தனர். அப்படி உருவாகிய இந்தப்படம் வெற்றியும் பெற்று நல்ல லாபத்தையும் தந்தது.

வெளிநாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கும் இந்த சிஸ்டத்தை கன்னடத்தில் சக்சஸ் பண்ணி காட்டிவிட்டார்கள். ஆனால் தமிழுக்கு செட்டாகுமா என பலர் யோசித்த நேரத்தில் இயக்குனர்கள் முத்துராமலிங்கனும் ஜெய்லானியும் சேர்ந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏழு வருடங்களுக்கு முன் ‘கேள்விக்குறி’ படத்தை இயக்கியவர் ஜெய்லானி.. இந்த வருடம் வெளியான ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தை இயக்கியவர் முத்துராமலிங்கன். இருவரும் சேர்ந்து மூன்று மாதங்களுக்கு முன் தங்களது அடுத்த படத்திற்கு இந்த கிரவுட் பண்டிங் மூலமாக அறிவிப்பு வெளியிட்டனர். தங்களது நிறுவனத்திற்கு ‘மூவி பண்டிங்’ என பெயரும் வைத்தனர்.

தற்போது அவர்கள் இருவருக்கும் இரண்டு படங்களை தயாரிக்க தேவையான பணம் சேர்ந்துவிட்டது. இத்துடன் பணம் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, பட வேலைகளை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர். எப்படியோ நினைத்ததை சாதித்துக்காட்டிவிட்டார்கள் இருவரும். படத்தையும் வெற்றிகரமாக்கினால், இனி இந்தமுறையில் பலர் படம் எடுக்க கிளம்பி வருவார்கள் என்பது உறுதி..