ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு பூஜை போட்டார் சி.வி.குமார்..!

பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து தமிழ் திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளராக வலம் வருபவர் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சி.வி.குமார்.

சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள் ஒருவன்” பிரசாத் இயக்கத்தில் தயாரித்துள்ள சி.வி.குமார், தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு பூஜை போட்டு துவங்கியுள்ளார்.. இதில் ஒன்று தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் “இன்று நேற்று நாளை”.

இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். விஷ்ணு மற்றும் கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவை வசந்த் (அறிமுகம்) மேற்கொள்கிறார். இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர்.

அடுத்த படத்தை அபி&அபி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் சி..வி.குமார். படத்தை இயக்குவது ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நலன் குமாரசாமி தான். படத்தின் பெயர் ‘கை நீளம்’. இது ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் அத்தியாயமாக தயாராகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.

மூன்றாவதாக பீட்சா, ஜிகர்தண்டா என தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதைகளங்களை கையாண்டு வெற்றி பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படம் “இறைவி”. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவிமிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது.