என் படத்தை ராஜபக்சேவுக்கு போட்டுக்காட்டினேனா? – கொதிக்கும் இயக்குனர்..!

தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் உலகையே உலுக்கிய ஒன்று. அந்த கொடிய சம்பவத்தை மையக்கருவாகவும் பாலச்சந்திரனை மையமாகவும் வைத்து ‘புலிப்பார்வை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி..

ஆனால் இந்தப்படம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அவரது கருத்தை பெறுவதற்காக திரையிட்டுக்காட்டப்பட்டதாக ஒரு சர்ச்சை வெடித்து கிளம்பியுள்ளது. ஆனால் இதில் துளியளவும் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிரவீன் காந்தி..

“நான் ஒரு இந்தியன்.. இந்தியர்களுக்காக, தமிழர்களுக்காக படம் எடுப்பவன்.. அப்படி இருக்கையில் நான் எதற்காக ராஜபக்சேவுக்கு எனது படத்தை போட்டுக்காட்டவேண்டும்.. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்து அவரது மகனை பற்றி படம் எடுத்துத்தரச்சொல்லி என்னிடம் கேட்டிருந்தால், நான் எப்படி படம் எடுத்திருப்பேனோ, அதேபோலத்தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறேன். இலங்கையில் அமைதி திரும்பவேண்டும் என்பதுதான் என் படத்தின் மையக்கரு” என்று கொதிக்கிறார் பிரவீன் காந்தி..