இயக்குனராக தன்னை நிரூபிப்பாரா காமெடி நடிகரின் வாரிசு..?

தொடர் வெற்றிகளை குவித்துவரும் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் அடுத்த தயாரிப்பாக வெளிவர இருக்கும் படம் தான் ‘சரபம்’.. சரபம் என்பது புராண விலங்குகளில் ஒன்று. அதன் பாதி உடல் பறவையாகவும், பாதி உடல் சிங்கமாகவும் இருக்கும். நம் ஊரில் இதை ‘யாழி’ என்றும் சொல்லுவார்கள்.

அதாவது அன்பு கொண்ட நெஞ்சத்துடனும், அதே நேரம் ஆக்ரோசமான உணர்வுடனும் இருக்கும் ஒரு மிருகப்பறவை.. அதேபோல இந்த ‘ சரபம்’ படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும் அந்த மிருகத்தின் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்தப்படத்தின் இயக்குனர் அருண்மோகன், பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனரான அனுமோகனின் மகன். கௌதம் வாசுதேவ் மேனனிடம் ‘வாரணம் ஆயிரம்’ மற்றும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

‘பிரம்மன்’ புகழ்(!) நவின் சந்திரா கதாநாயகனாகவும் புதுமுகம் சலோனி லுத்ரா படத்தின் நாயகியாகவும் நடிக்கின்றார். ‘ஆடுகளம்’ நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெகு விரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ள இந்தப்படத்தை உலகமெங்கும் ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் விநியோகம் செய்கிறது. வாரிசாக களம் இறங்கினாலும் இயக்குனராக தன்னை நிரூபிப்பாரா அருண் மோகன்..?