லோக்கல் சேனல்கள் மீது போலீசில் விஷால் புகார்..!

விஷால் எப்போதுமே கொஞ்சம் வேகமனாவர்தான். நடிகர் சங்கம் கமல் விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தபோதே அதற்கு எதிராக குரல் கொடுத்தவர். அப்படிப்பட்டவர் லோக்கல் சேனலில் லேட்டஸ்ட் சினிமா படங்களை அனுமதியின்றி ஒளிபரப்பினால் சும்மா விடுவாரா..?

ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் அங்கேயுள்ள இரண்டு லோக்கல் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்களை அனுமதியின்றி முறையற்ற வகையில் ஒளிபரப்புவதாக விஷாலுக்கு அவரது ரசிகர்கள் தகவல் கொடுத்துள்ளனர்..

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லை என்றாலும் விஷால் இதுகுறித்து உடனே காரைக்குடியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட இரண்டு லோக்கல் சேனல்களில் உள்ள சிலரை கைது செய்துள்ளார்கள். இது குறித்து காரைக்குடியிலே ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த விஷால் இந்த தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதோடு இதுபோன்ற லோக்கல் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறும் பத்திரிகைகளிடம் கோரிக்கை விடுத்தார்.