ஆர்யா-சூர்யாவால் களைகட்டிய ‘நம்பியார்’ இசை வெளியீட்டு விழா..!

ஸ்ரீகாந்த் தனது சினிமா கேரியரில் மிக முக்கியமாக கருதுவது தற்போது தான் நடித்துள்ள ‘நம்பியார்’ படத்தைத்தான். காரணம் ஒரு நடிகராக மட்டுமின்றி தனது மனைவியுடன் இணைந்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார்.

ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக சுனைனா நடிக்க, படத்தின் இன்னொரு தூணாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தேவி தியேட்டரில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் சூர்யா, ஆர்யா, சரத்குமார், ஜீவா, ஷாம், நமீதா, பார்த்திபன், சமுத்திரகனி, ஆர்.கண்ணன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதிலும் குறிப்பாக நேற்று ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனாவின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்த வந்திருந்த பிரபலங்கள் அனைவருமே வந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல, வந்தனாவுக்கோ இரட்டிப்பு சந்தோசம்..

விழாவில் பேசிய சூர்யா பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் அறிமுகமானபோது ஒரு பத்திரிக்கை பேட்டியில் அவரது தந்தை ஸ்ரீகாந்த்திற்கு சொன்ன ‘செருப்பு தைப்பவனாக இருந்தாலும் நீதான் முதன்மையானவனாக இருக்கவேண்டும்’ என்கிற வாக்கியத்தைத்தான் இன்றுவரை கடைபிடித்து வருவதாக கூறி ஸ்ரீகாந்த்தை மட்டுமல்ல, நம்மையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.