சூர்யாவின் ‘பூச்சாண்டி’ இப்போ ‘மாஸ்’ ஆனது..!

சூர்யாவும் வெங்கட்பிரபுவும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று சொன்னதுமே இந்த புது காம்பினேஷனை கண்டு ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் ஒரே வீட்டிலேயே ரெண்டு சம்பந்தம் பண்ணுவது மாதிரி, கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தை இயக்கும்போதே அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவது என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான்..

சரி.. விஷயத்திற்கு வருவோம்.. வெங்கட்பிரபு எப்போதுமே தனது பட டைட்டில் கேட்சிங்க்காக இருக்கவேண்டும் என நினைப்பவர். அதனால் இந்தப்படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் படமும் ஹாரர் வகையை சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.

படம் ஹாரர் வகை என்பது உண்மைதான், ஆனால் டைட்டில் பூச்சாண்டி அல்ல என்கிறது வெங்கட்பிரபுவின் நெருங்கிய வட்டாரம். படத்திற்கு ‘மாஸ்’ என்கிற டைட்டிலை இறுதி செய்திருக்கிறார்களாம். நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை-14ஆம் தேதி துவங்க உள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.