ராட்சசி போய் பொன்மகள் வந்தால்…

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

“பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே.ஜே.ப்ரட்ரிக், இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவை செய்யவும், ரூபன் படத்தொகுப்பினை செய்யவும் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு இசையமைக்க கோவிந்த் வசந்தாவும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜையில் மூத்த நடிகர் சிவக்குமார், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர் B.சக்திவேலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Response