‘மனம்’ படைத்த இயக்குனருக்கு சூர்யா தந்த கிஃப்ட்..!

கடந்த மாதம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கிய இந்தப்படம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட என்கிற பெருமையையும் பெற்றது.

ஏற்கனவே ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் மூலம் தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் இந்த விக்ரம் கே.குமார்.. இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. தற்போது ‘அஞ்சான்’ படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதை முடித்துவிட்டு விக்ரம் குமாரின் படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.