விஸ்வரூபம் 2 படத்திற்கு வந்த சிக்கல்..!

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரி பிரமிட் சாய்மிரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஷேகர் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்தாத் சய்னுதீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிடப்படுகிறது. கமல்ஹாசன் இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

கடந்தமுறை விஸ்வரூபம் முதல்பாகத்திற்கு நடந்ததுபோன்று எதுவும் நடக்காமல் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரமிட் சாய்மிரா நிறுவனம் படத்தின் தடைகோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.

2008ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ. 6.90 கோடியும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் அப்பணத்தை “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ரூ. 6.90 கோடியை திரும்பக் கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடும் வேலைகளில் கமல் இறங்கியுள்ளார்.

மர்மயோகி படத்திற்கு சம்பளமாக கொடுத்த ரூ. 4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக கமல் திருப்பி செலுத்தாததால் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Response