ஐ.பி.எல் போராட்டம் என்றுக் கூறி வன்முறை தூண்டியதுக்காக சீமான் மட்டுமல்லாது பாரதிராஜா, அமீர், கௌதமன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சென்னையில் நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் கிரிகெட் ரசிகர்களும் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இது குறித்து தற்போது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா, “ஐ.பி.எல்-க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன் ஆகிய அனைவருமே. எனவே, இவர்கள் அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.