நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து வரும் படம் “அதிதி”. மலையாள படமான காக்டெயில் என்ற படத்தின் ரீமேக். அதன் பாடல் கம்போசிங்கில் இருந்த அவரை ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி? என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
“நான்கு வருடங்கள் ஒரு பெரிய இடைவெளியாகி விட்டது. இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி விட்டேன். அறத்துப்பால் – பொருட்பால் – காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று விதமான விதங்களில் இசையமைத்து இருக்கிறேன்.
அறத்துப்பால் இசை ஒரு மாதிரி! பொருட்பால் இசை இன்னொரு மாதிரி! காமத்துப்பால் இசை இன்னொரு மாதிரி என்று வேறுபடுத்தி இருக்கிறேன். இதற்காக உலகம் முழுக்க உள்ள எல்லாநாட்டு தமிழ் பாடகர்களையும் பாடவைத்திருக்கிறேன். இங்கே நமக்கு பரிச்சயமான எல்லா பாடகர்களும் பாடி இருக்கிறார்கள் மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருகிறார்கள்.
எந்த தலைமுறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. வார்த்தையால் சொல்வதை இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன்.
ஜனவரி 17ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று இதை வெளியிட இருக்கிறேன் என்றார்.