விஜய், அமலா பால் நடிப்பில், விஜய் இயக்கத்தில், மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் உருவாகியுள்ள தலைவா படம் நாளை மறுநாள் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கு புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விளக்கு அளிக்கப்படவில்லை. இதனால் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை. இது குறித்து இன்று மாலை விநியோஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த கூட்டத்தில் கலந்தாலோசித்தனர்.
முடிவில் நம்மிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறும்போது, “படத்திற்கு ‘யு’ சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால் கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. மேலும் வரி விலக்கு அளிக்கப்படும் வரை படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்” என்றார்.
“நாளைக்குள் வரிவிலக்கை நாங்கள் பெற்று, படத்தை ரிலீஸ் செய்வோம்” என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
இதற்கான காரணம் என்னவென்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, “படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான இரண்டு வசனங்கள் தான் என்று கூறுகிறார்கள். “உங்க ‘அம்மா’வை பாருடா, அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்”, “எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்” என விஜய் பேசும் இந்த அரசியல் வசனங்கள் தான் படத்தை முடக்கி போட்டுள்ளன”, என செய்திகள் கசிந்துள்ளன.
தலைவா ரிலீசுக்கு நாளை ஒரு நாள் தான் உள்ளது, அதற்குள் பிரச்சினைகள் முடிந்து படம் ரிலீஸ் ஆகுமா?