மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், அதிமுகவில் சேர யாரும் வராததால் வாக்காளர் பட்டியலை வைத்து போலியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த M.உதயகுமார், (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர்).
கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.