ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவை நெருங்க எட்டு வருஷம் ஆச்சு – ஏ.ஆர்.முருகதாஸ்

DSC_0575

பைன் போக்கஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, சுவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.

சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு முதல் பாடல் சிடியை வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

அதன் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: “இயக்குனர்  கிருஷ்ணா நண்பராக அறிமுகம் ஆகும் முன்பு, அவருடைய ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் எனக்கு அறிமுகம் ஆனது. அதன் பிறகு மூன்று தடவை சந்தித்திருப்பேன். அவரிடம் இந்தப் படத்தில் பர்சனலா பிடிக்கிற விஷயம் புதுமுகங்களை அறிமுக படுத்தியதுதான். ஹீரோ, ஹீரோயின், பாடலாசிரியர், பாடகர் என் பலரை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு தைரியம், உறுதி வேண்டும். எனக்கு கூட அந்த தைரியம் கிடையாது. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சத்யாவை நான் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அறிமுகப்படுத்தும் முன்பு, கிருஷ்ணா தான் அவரை கண்டுப்பிடித்தார். அவருடைய படத்தின் பாடல்களை கேட்டுத் தான் இயக்குனர் சரவணன், சத்யாவை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவருக்கு நல்ல இடம் இருக்கு. விஷுவல்ல யாரை பாராட்டுறதுன்னே தெரியல. ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பிரமாதமா வேலை செய்திருக்காங்க. ரகுமான் ஸாரை இன்ஷ்பிரேஷனா எடுத்துக்கிட்டு சத்யா வேலை செய்திருக்கிறார்.

நான் 1990களில் உதவி இயக்குனராக இருந்த போது டாக்டர் சுப்பராயன் நகரில் தங்குவதற்கு அறை தேடினேன். அப்போ அங்கு பேச்சுலருக்கு இடம் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் அங்கு அறை எடுத்து தங்கினேன். அதற்க்கு காரணம் அங்கு ரகுமான் சாரோட ரெக்காடிங்க் ஸ்டுடியோ இருந்தது.

என் அறையின் மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ரகுமான் சாரின் ஸ்டுடியோ தெரியும். இரவில் சுப்பராயன் நகரே இருட்டில் கருப்பாக இருந்தாலும், அவரது ஸ்டுடியோ மட்டும் வெளிச்சத்தில் பளிச்சுன்னு தெரியும். இப்போது எந்த படத்துக்கு பாடல் வேலை நடக்குது என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.

அங்கிருந்து அவரிடம் சென்று கம்போஸ் பண்ண எட்டு வருஷம் எனக்கு ஆனது. அவரிடம் ஒரு படம் பண்ணினேன். அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்.  நான் வெளி இடங்களுக்கு செல்லும் போது ரகுமான் சார் ஊரில் இருந்து வருகிறேன் என்பேன். அந்த அளவுக்கு ரகுமான் சார் புகழ் பெற்றவர். சத்யா அவரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வரணும்.

இயக்குனர் கிருஷ்ணாவும் நிறைய போராடி வந்திருக்கிறார். போராட்டம் கஷ்டமானது. நிறுத்தத்தை தாண்டி பஸ் நிக்கும் போது, பஸ்ஸ பிடிக்க ஒருவன் ஓடுவான். அந்த பஸ் புறப்பட்டுச்சுன்னா அவன் பின்னாலே ஓடிப்போய் துரத்தி பிடிச்சி பஸ்ல ஏறுவான். அவன் பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்று அங்கு நிற்பவர்கள் நினைப்பார்கள். அது மாதிரி கிருஷ்ணாவை நான் பார்க்கிறேன். இந்த நெடுஞ்சாலையை பிடிச்சி  அவர் வேகமா போகணும். என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வாறு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, “தயாரிப்பாளர் தாணு சார் மூலமாக எனக்கு இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமானார். அவர் கதை சொல்லும் பொது எமோஷனாக சொல்வார். அது எனக்கு பிடித்திருந்தது. பெரிய நடிகர்களின் படத்தை போல இந்த நெடுஞ்சாலை படத்தை குவாலிட்டியா பெரிய புரஜக்டா எடுத்திருக்கிறார். படம் பண்ணினால் குவாலிட்டியா பண்ணனும்.

இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா குவாலிட்டிய படம் இருந்தால் தான் போறேன். இந்த படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது. என்றார்.

படத்தின் இயக்குனர் கிருஷ்ணா பேசுகையில், “ரகுமானின் ஸ்டூடியோவுக்குள் போகும் போது கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்வு இருக்கும். அங்கு கேட்டது உடனே கிடைக்கும். நல்ல உள்ளங்கள் அங்கு நிறைய இருக்கும். ”ஜில்லுன்னு ஒரு காதல்” படம் செய்த போது ஒன்றரை ஆண்டு அவரிடம் பழகிருக்கேன். இரவு பகல் தூங்காமல் வேலை செய்வார்.

எப்போது தூங்குவீர்கள் என்று கேட்பேன். நாற்பது வயது தாண்டுவதற்குள் நிறைய உழைக்கணும் என்பார். அந்த உழைப்புக்குத்தான் இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருது பெற்றார். இயக்குனர் முருகதாஸ் படங்கள் எனக்கு கமர்சியலாக படம் செய்ய உதவியாக இருந்திருக்கிறது. அதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் இவ்வாறு பேசினார்.

விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரகனி, எங்கேயும் எப்போதும் சரவணன், தாமிரா, நடிகை காயத்ரி மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன், சாட்டை தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் மற்றும் ஜெர்ரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் இயக்குனர் பாக்யராஜ் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.