ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் விரைவில் வெளியாகும் பேச்சிலர்

‘Axcess Film Factory’ தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படம் “பேச்சிலர்”.
படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பத்திரிக்கையாளர்களுடன் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் மற்றும் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர்.

Axcess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது,

“எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன்று இப்படமும், ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால், அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறுகையில்,

“கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் ஐடி கெம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம். இளம்பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜீவி பிரகாஷ் குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார். படத்தின் டீஸர், இப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம். ஆனால் இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

திவ்யபாரதி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Leave a Response