முடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்

தென் இந்திய சினிமா துறையில் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது. தென்னக சினிமாவிற்கு பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவன தயாரிப்பாளர் திரு RB சௌத்ரி அவர்கள் தற்போது ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். ஜீவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். தற்போதைக்கு இப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக்குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் நேற்று காலை (அக்டோபர் 21, 2020 ) தொடங்கியது.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் இது குறித்து கூறியதாவது,

“தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராக திகழும் திரு RB சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப்பயணம் துவங்குவது, மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது. பல பெரும் கலைஞர்களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் RB சௌத்ரி அவர்கள். அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தரமான குடும்ப படங்களை, ரசிகர்கள் 100% சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது, நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான் தென்னக சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

நடிகர் ஜீவாவுடன் இணையவுள்ளது குறித்து கூறும்போது,

“இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம். ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர். இயக்குநர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார். இது தான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். அவர்களோடு VTV கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள்.

Leave a Response