மும்மொழியில் வெளியாகும் படத்தில் பாட்ஷா நடிகரின் மகன் அறிமுகம்

பாட்ஷா நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் “சீதாயணம்”

“சீதாயணம்” மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த “பாட்ஷா” திரைப்படத்தை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது. 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. பாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது மகன் அக்ஷித்தும் தந்தையை போலவே “சீதாயணம்” என்கிற படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தை பிரபாகர் ஆரிபாக இயக்கியுள்ளார். ‘கலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட்’ பேனரில் லலிதா ராஜ்யலக்ஷ்மி தயாரித்துள்ள மும்மொழிப் படத்தை ரோஹன் பரத்வாஜ் வழங்குகிறார்.

இப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண்களை மதிக்கும் கருத்தை வலியுறுத்தி மும்மொழிகளில் வெளியாகிறது “சீதாயணம்”. ஹீரோவின் காதல் விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.. இதன் விளைவு என்ன? ஹீரோ யாருக்கு எதிராக போராடுகிறார்? என்ற சில திருப்பங்களுடன் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகியுள்ளது சீதாயணம்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. புகழ்பெற்ற தமிழ் மற்றும் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரின் வாரிசான இசைமைப்பாளர் பத்மநாப பரத்வாஜ், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பழனிபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.

படத்திற்கு சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. திருமண அழைப்பிதழில் இருக்கும் ஒரு ஸ்லோகத்தை பாடலாக வடிவமைத்துள்ளார்கள். தெலுங்கு கன்னடத்தில்,ஸ்வேதா மோகன் இந்தப் பாடலை பாட, தமிழில், பிரபல பின்னணிக் குரல் S.N.சுரேந்தர் மகளும், நடிகர் இளைய தளபதி விஜய்யின் உறவினர் பாடகி பல்லவி வினோத் தமிழில் மூச்சு விடாமல் முதல் முறையாக பாடி இருக்கிறார்…

பாங்காங், மங்களூர், அகும்பே, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் 63 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..

Leave a Response