யதார்த்த கதாநாயகியின் 25 வது திரைப்படம்

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ தொடர்ந்து வித்தியாசமான களங்களில், புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது. அவர்கள் தங்களின் பெருமை மிகு நான்காம் படைப்பாக ‘ஃபேஷன் ஸ்டுடியோஸ்’ உடன் இணைந்து புதிய திரைப்படமாக “பூமிகா” படத்தினை அறிவித்துள்ளார்கள். இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25 வது திரைப்படம் ஆகும். இயக்குநர் ரதீந்தரன் R ப்ரசாத் எழுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகிறது

படம் குறித்து இயக்குநர் ரதீந்தரன் R ப்ரசாத் கூறியதாவது,

“டெக்னிகலாக இது திரைக்கு வரும் எனது முதல் திரைப்படம் ஆகும். ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘ஃபேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இப்படம் தொடர் படப்பிடிப்பில் ஒரேகட்டமாக 35 நாட்களில் நீலகிரி மலைப்பகுதிகளில் மற்றும் தனியான காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு காடுகளில் கடும் சிக்கல்ளுடன், கடும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில் படமாக்கப்பட்டாலும், படக்குழுவின் அற்புதமான ஒப்புதலால் வெகு விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் தவிர இப்படத்தில் நிறைய புது முகங்கள் நடித்துள்ளனர். கடும் இன்னல்களுக்கிடையே பெரும் ஒத்துழைப்பு தந்த படக்குழுவிற்கு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மேலும் இப்படத்தில் பிரமிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்திய இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara )வுக்கு தனித்த முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் ப்ரித்வி சந்திரசேகரின் இசை கண்டிப்பாக ரசிகர்களிடம் பெருத்த அளவில் பாராட்டுக்களை பெறும். படக்குழு வெளியிட்ட மோஷன் டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியிடப்படும்” என்று கூறினார்.

‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ நிறுவன தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறியதாவது,

“இப்படத்தில் இயக்குநர் ரதீந்தரன் R ப்ரசாத் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். மிகச்சிறந்த கதை சொல்லியது மட்டுமல்லாமல், அவர் மிகச்சிறப்பான டெக்னீஷியனாகவும், சிறப்பான திட்டமிடல் ஆளுமையாகவும் திகழ்கிறார். 35 நாட்களில் அற்புதமான வகையில் படத்தை முடித்து எங்களை பிரமிக்க வைத்துள்ளார். மேலும் இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமாக அமைந்தது அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அவரது நடிப்பு திறமை பற்றி சொல்லத்தேவையில்லை. மிகக்குறுகிய காலத்தில் தனக்கென தனியொரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார் அவர். இப்படத்தில் அவரது நடிப்பு அவரை மிகப்பெரிய உயரத்திற்கு இட்டுச்செல்லும்” என்றார்.

இப்படத்தின் நடிகர் பட்டாளத்திலும் தொழில் நுட்ப கலைஞர் குழுவிலும் பல புதிய முகங்களை கொண்டிருக்கிறது. அனைவரும் மிகச்சிறப்பான பணியினை இப்படத்தில் தந்துள்ளார்கள்.

ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியீடு பணிகள் தற்போது நடந்து வருகிறது அதனை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ப்ரித்வி சந்திரசேகர். சண்டைப்பயிற்சிக்கு டான் அசோக் பொறுப்பேற்றுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.

Leave a Response