புதிய மென்பொருள் தொழில்நுட்பத்துடன் இசையமைக்க உதவிய கொரோனா ஊரடங்கு

பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயா ஒரு புதிய இசை ஆல்பம் தயாரித்துள்ளார். பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னோடு கல்லூரி இசைக்குழுவில் பங்கெடுத்த நண்பர்கள் சிலரை மீண்டும் கண்டெடுத்து பணியாற்ற வைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் பணியாற்ற அவர்கள் பிரத்யேகமான சாப்ட்வேர்களை கற்றுள்ளனர். இணையத்தில் பாடலை உருவாக்கம் செய்வது வழக்கத்தைக் காட்டிலும் அதிக நேரம் செலவானாலும் தரம் குறையாமல் பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. தன் கல்லூரி நண்பர் அஞ்சன் இராஜ்குமார் இந்த உருவாக்கத்திற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தயா. இவர் ‘ஒரு மோதல் ஒரு காதல்’, ‘ஜெயிக்கிற குதிரை’, ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அஞ்சன் இராஜ்குமார், தீபிகா வரதராஜன், ஷர்மிளா குருமூர்த்தி மோகன், வெங்கட், நிரஞ்சன் பாண்டியன், ஜானு சந்தர், விஜய் ஆகியோர் இதில் பணியாற்றியுள்ளனர்.

இப்படி இணையம் வாயிலாக முழு அளவில் ஆல்பம் தயாரித்துள்ளது போல் திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார். பல வித்தியாசமான தொகுப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆல்பத்தில் மனதை வருடும் “ஏதோ என்னில் ஊறும்”, விரகதாபத்தை பதிவு செய்யும் “மாயமோ”, காதலின் ஆர்ப்பாட்டத்தை சொல்லும் “பேசி பேசி” காதலின் வலியை சொல்லும் “நீ மாயாவி” பெண்களின் மதிப்பை கூறும் “சிறகுதான் கடன் கேட்போமா” ஆகிய பாடல்கள் இடம் பெறுகின்றன.

நடிகர் தயாரிப்பாளர் விஷால், விக்னேஷ் சிவன், சிபிராஜ், நட்டி, ரித்விகா அருண் வைத்தியநாதன் ஆகியோர் பாடல்களை வெளியிடுகிறார்கள்.
முதல் பாடலை விஷால் ஆகஸ்ட் 19ஆம் தேதி (இன்று) வெளியிடுகிறார்.

இந்த கொரோனா ஊரடங்கால் நண்பர்கள் யாரும் சந்திக்காமல், இணையத்தின் மூலமாக தொழில்நுட்ப உதவியுடன் மென்பொருள் உருவாக்கி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.

Leave a Response