ஆரியக்கதைகளைக் கொண்டு ஆபாசமாக இகழ்வதன் மூலம் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருநாளும் குன்றிவிடாது!

சில தினங்களுக்கு முன்பு, ‘கறுப்பர் கூட்டம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு யூடியூப் சேனலில் ஹிந்து கடவுளான முருக பெருமானின் ‘கந்த சஷ்டி கவசத்தை’ ஹிந்துக்களின் மனம் புண்படும்படி மிகவும் ஆபாசமாகவும் கீழ்தரமாகவும் அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பல ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் நேற்றைய முன்தினம் சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவருடைய கைதை தொடர்ந்து அதே நிறுவனத்தை சேர்ந்த, முருக பெருமானை ஆபாசமாக விமர்சித்த சுரேந்திரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

முருக பெருமான் மற்றும் வேறு சில இந்து கடவுள்களை ஆபாசமாகவும், கீழ்தரமாகவும் விமர்சித்த அந்த யூடியூப் சேனலையோ அல்லது அவதூறாக பேசிய அந்த நபர்களை ஹிந்து அமைப்புகள் மற்றும் ஹிந்து காட்சிகளை தவிர வேறு எந்த கட்சியோ அமைப்போ கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஒவ்வொரு மேடையிலும் தமிழ் கடவுள் முருக பெருமான் என்று அவ்வப்போது பேசும் ‘நாம் தமிழர் கட்சி’ தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் இந்த நிகழ்வு நடந்து சில தினங்களாகியும் மவுனம்காத்து வந்தார். இதன் காரணமாக சீமான் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ சார்பாக குறுந்தகவல் அனுப்பி முருக பெருமானை பற்றிய இந்த ஆபாச பேச்சுக்கு ஏன் சீமான் இதுநாள் வரை கண்டனம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினோம். எங்களுடைய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பத்திரிகை செய்தியை அனுப்பியுள்ளார் சீமான்.

சீமான் அனுப்பிய பத்திரிகை செய்தி கீழ்வருமாறு:

“ஆரியக்கதைகளைக் கொண்டு ஆபாசமாக இகழ்வதன் மூலம் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருநாளும் குன்றிவிடாது!

தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு இணையவெளியெங்கும் விவாதப்பொருளாக மாறி நிற்கும் வேளையில் அதுகுறித்தான ஒரு பொதுப்புரிதலை உருவாக்கி, தமிழ் மக்களிடம் தெளிவை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருகிறோம். தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் முருகனை முப்பாட்டன் எனத் தற்காலத் தமிழ்ப்பிள்ளைகள் உரிமையோடு கொண்டாடி மகிழ்கிறோம். அவ்வாறு தமிழர்களின் பெருத்த பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில் தமிழின முன்னோர்களை இழித்துரைத்து பரப்புரை செய்யும் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவை யாவும் சிறுகச் சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து சமரிட்ட ‘புத்தர்’, சமரச சன்மார்க்கம் கண்ட ‘வள்ளலார்’, ஐயா வழியெனத் தனி வழிப்பாட்டு முறையை ஏற்படுத்திய ‘வைகுந்தர்’, இசுலாமியர்களோடு இணக்கம் காட்டிய மராத்திய ‘சிவாஜி’ எனத் தன்வயப்படுத்தி உட்செரிக்கும் ஆரியம், அறிவாசான் அண்ணல் அம்பேத்கரையும், பெரும்பாட்டன் வள்ளுவனையும்கூடத் திருட எத்தனித்து வருகிறது. திருடிச்சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் தமிழின முன்னோர்கள் முருகன், சிவன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவரும் இன்றைக்கு முழுமையாக ஆரியமயக்கப்பட்டுவிட்டனர். நாட்டார் தெய்வங்கள் மீது படையெடுப்பை நிகழ்த்தாத ஆரியம், திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டது. விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்ரனாக்கினார்கள். இத்தகைய முறையில் நிகழ்ந்த ஆரியமயமாக்கல் மூலம் ஆபாசக்கதைகளை எழுதி, இட்டுக்கட்டி நமது முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். இதனைப் பகுத்துணர்த்தித் தமிழர்களுக்கென்று இருந்த பாரம்பரிய வழிபாட்டை மீட்டெடுத்து வழிகாட்டாது ‘கடவுள் மறுப்பு’ எனத் திராவிட இயக்கங்கள் மொத்தமாய்க் கைவிரித்ததன் விளைவாகத்தான் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை ‘இந்து’ எனும் கற்பிதத்திற்குள் மொத்தமாகத் தள்ளி ஆட்கொண்டு ஆண்டுக் கொண்டிருக்கிறது ஆரியம். இது திராவிட இயக்கங்கள், ஆரியத்திற்கு முறைவாசல் செய்து வழிதிறந்துவிட்ட பெரும் வரலாற்றுத்தவறாகும். அதனை முழுதாய் தெளிந்துணர்ந்தே, அவ்வரசியலைத் தோலுரித்துப் பண்பாட்டுத்தளத்தில் பெரும் புரட்சியை உருவாக்க நாம் தமிழர் கட்சி தனது கிளை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவை உருவாக்கி, மெய்யியல் மீட்டெடுப்பை நாளும் செய்துகொண்டிருக்கிறது. அதனை நாங்கள் செய்யத் தொடங்குகிறபோது கேலிசெய்து பிற்போக்கெனக் கட்டமைக்க முயன்ற திராவிடக்கூட்டம், இன்றைக்குத் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியத்திடமிருந்து மீட்க வேண்டுமெனக் கோரி, திடீர் கூக்குரலிட்டுக் கிளம்புவது நகைப்பையே தருகிறது. திருத்தணியைத் தாண்டி முருகப் பெரும்பாட்டனின் வழிபாட்டுத்தளத்தை எங்கும் நிறுவ முயலாத இந்துத்துவ இயக்கங்கள் ‘இந்துக்கடவுள்’ என அவரைச் சொந்தம் கொண்டாட முயல்வதும், இத்தனை ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையென அறிவித்திடாத திராவிடக்கட்சிகளும், அக்கோரிக்கையை வைத்திடாத திராவிட இயக்கங்களும் இன்றைக்குத் திடீரென முருகனைப் பேசுவதும், புகழ்வதும் அரசியல் தன் இலாபம் என்பதைத்தாண்டி வேறில்லை.

முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப்பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் கேவலப்படுத்தி, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிடச் செயற்பாட்டாளர்களின் இத்தகைய செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. இப்பொழுது முருகனை விமர்சிக்கும் அந்நபர் கடந்த தேர்தல்களில் திராவிடக் கட்சியான தி.மு.கவிற்கு நேரடியாக வாக்கு சேகரிக்குமளவிற்குத் தொடர்பிருக்கும் பொழுது இவ்விவகாரத்தில் திமுக எவ்வித கருத்தும் சொல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது.

இத்தகைய இழிவானப் பரப்புரை மூலம் தமிழர் மெய்யியல் மீட்சிக்கான எங்களது சமரை ஆரிய திராவிட அடிவருடிகள் தங்களது அரசியலக்காக மடைமாற்ற நினைப்பாறாயின் அது அறிவீனம். உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது எனவும், தமிழர்களின் ஆதி சமயங்களையும், வழிபாட்டு முறைமைகளையும், தொல்லிய இறைகளையும் மீட்டெடுத்து மெய்யியல் மீட்சியை வீரத்தமிழர் முன்னணி சாத்தியப்படுத்திக் காட்டும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.” இவ்வாறு தன்னுடைய பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார் சீமான்.

Leave a Response