இந்திய அரசை வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி…

தற்போது உலகெங்கும் உள்ள பெரும்பாலான நாடுகள் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. இந்தியாவும், மார்ச் 24 முதல் நேற்றுடன் ஊரடங்கின் இரு கட்டங்களை கடந்து இன்று முதல் மூன்றாவது கட்ட ஊரடங்கை தொடர்கிறது. இந்த மூன்றாவது கட்ட ஊரடங்கில், மத்திய அரசும் மாநில அரசும், பாதிப்பு குறைந்துள்ள ஊர்களில் சில தளர்வுகளை அளித்துள்ளது.

சில தினங்களாக சிறப்பு ரயில்கள் விடப்பட்டு, அதில் வெளி மாநில மக்கள் அவர்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்த பலர், ஏழை தொழிலாளிகளின் நலன் கருதி மத்திய அரசு இலவசமாக ரயில் பயணம் ஏற்பாடு செய்துள்ளதாக நினைத்து வந்தனர். உண்மை என்னவென்றால், ரயிலில் பயணம் செய்த அனைவருக்கும் ரயில் பயணத்திற்கான கட்டணத்தை ரயில்வே துறை வசூலித்துள்ளது. அதுவும் சாதாரணமாக வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல, அதற்கும் மேலாக அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகமான ரயில் கட்டணத்தை கண்டித்து பாஜக’வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த கண்டன பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை பட்டினி கொண்ட வெளி மாநில தொழிலாளர்களிடம் அதிக விலை ரயில் கட்டணத்தை வசூலித்த இந்த முட்டாள்தனமான செயலை எப்படி இந்த இந்திய அரசு செய்துள்ளது! வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இலவசமாக அழைத்து வரப்பட்டனர். ரயில்வே துறை அனுசரிக்கவில்லை என்றால், PM Cares அந்த ஏழைகளின் ரயில் கட்டணத்தை கட்டியிருக்கலாமே?” என தனது ட்விட்டர் பதிவில் இந்திய அரசை சற்று காரசாரமாகவே வெளுத்துள்ளார் சுப்ரமணியன் சாமி.

Leave a Response