துப்பறியும் நடிகர் விதார்த்…

நடிகர் விதார்த் தற்போது ஒரு புதிய களத்தில், புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் துப்பறிபவராக நடிக்க உள்ளார். நிறைய மர்மங்கள் நிறைந்த இந்த திரில்லர் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் மனோஜ் ராம் இயக்கப் போகிறார். இவர் பிரபல இயக்குனர் ஷக்தி சௌந்தரராஜனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் திரைக்கதை, தமிழுக்கு முற்றிலும் புதிதான களத்தில் முழுக்க முழுக்க மர்மங்கள் நிறைந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது, “இப்படத்தை மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ளோம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களும் விறுவிறுப்பும் கூடியதாக அமைந்திருக்கும். சம காலத்தில் உள்ள மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கரு உருவாக்கப் பட்டுள்ளது”. என்கிறார் இயக்குநர் மனோஜ் ராம்.

இயக்குனர் மனோஜ் ராம், நடிகர் விதார்தை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்தது பற்றி கூறும் போது, “விதார்த் அவர்கள் தொடர்ந்து கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்கள் செய்து, கதையின் நாயகனாக விளங்குகிறார். இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். எங்களை மாதிரி புதுமுக இயக்குனர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதம். இப்படத்தின் திரைக்கதை முடித்ததும் இந்த கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடிப்பதற்கு அவரால் மட்டுமே முடியும் என்று எனக்கு தோன்றியது. மேலும் இப்படத்தில் வித்தார்த்தின் நண்பனாக பிக்பாஸ் புகழ் சென்ட்ராயன் நடிக்கப் போகிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் நடிகர் சந்தோஷ் இப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்களைத் தொடர்ந்து சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். வித்தார்த் மனைவியாக, ஹிரோயினாக நெடுநல்வாடை படப்புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார்.

புதுமுக இயக்குநரான என்னை முழுமையாக நம்பி, இப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதற்காக தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் அவர்களுக்கும், வெள்ளை சேது அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இப்படத்தின் வேலைகள் ஆரம்பித்து தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையில் நடத்த உள்ளோம்.” என்று இயக்குனர் மனோஜ் ராம் தெரிவித்தார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக “புரொடக்ஷன் என்.2” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. Preniss International (OPC) Pvt Ltd நிறுவனத்திற்காக இப்படத்தை பிரேம்நாத் தயாரிக்கவுள்ளார். பரத் ராகவன் என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மெட்ரோ மற்றும் குரங்கு பொம்மை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த N.S. உதயகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். “பியார் பிரேமா காதல்” படத்திற்கு எடிட்டிங் செய்த மணி குமரன் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்யப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சத்யா, சைத்தான் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார் A.B.R. பருத்திவீரன், நாடோடிகள், சுப்ரமணியபுரம் மற்றும் ரேணிகுண்டா படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர் இப்படத்திற்கு ஸ்டன்ட் செய்ய உள்ளார்.

Leave a Response