மாணவர்கள் மத்தியில் எவ்வாறு போதைவஸ்து பொருட்கள் கிடைக்கப்பெறுகிறது என்பதை சுட்டிக்காட்டும் திரைப்படம்….

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன்”. மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி(லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் படத்தொகுப்பினை செய்துள்ளார். குகை மா.புகழேந்தி பாடல்களை எழுத, ஜுபின்(பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் நந்தன் சுப்பராயன், நந்தன் சுப்பராயன் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் என்பது கூடுதல் தகவல்.

மயூரன் படத்தின் இயக்குனர் நந்தன் சுப்பராயன் நம்மிடம் பேசியபோது கூறியது, “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்! நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள் போராளிகள்! இங்கு அதிர்ஷ்டசாலி களைவிட போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை! யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை, மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்!

சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. மயூரன் விரைந்துன்னை காக்க வருபவன் என்று பொருள்படும், இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும் சொல்லலாம்.

கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்…! ஒரு தேசம்…!!

அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்று மரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்.

படம் ஆகஸ்ட் 2ம் தேதி அன்று தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் பேனர் மூலமாக வெளியிட பட உள்ளது.” என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

இப்படம் பற்றி நம்முடைய நிருபர் விசாரிக்கையில், இப்படம் ஒரு கல்லூரி பின்னணியில் நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் எவ்வாறு போதைவஸ்து பொருட்கள் கிடைக்கப்பெறுகிறது, மாணவர்கள் ஒரு சில கல்வி நிர்வாகத்தால் எவ்வாறு தவறான தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை பற்றி சவுக்கடி கொடுக்கும் வகையில் இந்த திரைப்படம் துல்லியமாக சொல்லும் என்று சொல்லப்படுகிறது.

இப்படம் வெளியாகிய பிறகு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீதும், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மீதும் கண்டிப்பாக கவனம் செலுத்துவார்கள் என்று தோன்றுகிறது.

Leave a Response