தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் கடைகளில் ஸ்டாக் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு எதிராக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ‘அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் சட்டம் 2016 இன் படி விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதனால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் பிளாஸ்டிக்கு தடை விதிக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு அதிகாரம் வழ்ங்கியுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க முடியாது எனத் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து பிளாஸ்டிக் தடைக்கு இன்னும் இரண்டு வாரக் காலங்களே உள்ளதால் கடைகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் ஸ்டாக் வைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.