இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் பாஜக ஆட்சி தான் – தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை..!

இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தான் என்று அக்கட்சியின் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக மகா சக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே பாஜக ஆட்சியை இழந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் வெறும் 4 இலக்க ஓட்டு வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்துள்ளோம்.

ராஜஸ்தானில் பாஜக வாங்கியுள்ள ஓட்டு சதவீதம் 38.8 சதவீதம். காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் 39.3 சதவீதம். நூற்றுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் பாஜக பல இடங்களில் தோற்றுள்ளது. ஒரு இடத்தில் வெறும் 50 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுள்ளோம்.

ஓட்டுசாவடிக்கு ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று இருந்தால் கூட அது சட்டசபை தொகுதி அளவில் வரும்போது சில நூறு வாக்குகள் கூடுதலாக கிடைத்து பல இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும். முடிவு வேறு மாதிரி வந்திருக்கும்.

எனவே மகாசக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருவரையும் விட்டு விடாமல் அனைத்து வாக்காளர்களிடம் நமது செயல்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை நம் பக்கம் கவரவேண்டும்.

இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தான் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று தமிழிசை பேசினார்.

Leave a Response