சின்மயி ஒரு குழந்தை, அவரை யாரோ தூண்டிவிடுகிறார்கள் – ராதாரவி பரபரப்பு பேச்சு!

பாடகி சின்மயியை யாரோ தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

பொன்னர்சங்கர் படப்பிடிப்பின் போது, அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் மீ டூ ஹேஷ்டேகில் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை மறுக்கும் விதமாக நடிகர் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வைரமுத்து விவகாரத்தில் பாடகி சின்மயியை யாரோ தூண்டிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

” மீ டூ இயக்கம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கருப்பினப்பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடர்ந்த நிலையில். நம்மூரில் குறிப்பாக திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அதிகமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் நோக்கம் தெரியாமல்..

பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது நாங்கள் தெருவில் இறங்கி போராடினோம். எங்கள் நடிகைகள் மீது அவதூறு பரப்பியபோது நடிகைகளுக்காகப் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் நடிகர் சங்க பதவியில் இருந்தபோதே பெண்களைப் பாதுகாக்க, வாசுகி தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது. திரைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழும் போது, ஒரு சார்பாக நடந்துகொள்ளவேண்டாம். இருதரப்பிலும் விசாரித்து செய்தியாக வெளியிடுங்கள்.

சின்மயியை யாரோ ஏவுகிறார்கள், அந்தப்பெண் பாவம். அவர் குழந்தை மாதிரி. அவர் பின்னால் இருக்கிறவர்கள் ஒரு கட்டத்தில் ஒதுங்கிவிடுவார்கள். பாவம் இவர் தான் மாட்டிக்கொண்டு தவிக்கப் போகிறார்.

பாஸ்போர்ட்டை தேடுவதாக சின்மயி சொல்வதை நம்ப நாம் என்ன சின்ன குழந்தையா. பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று விவரம் கேட்டால், அவர்களே எடுத்து தரப்போகிறார்கள். யாருடைய தூண்டுதலின் பேரில் அவர் இப்படி நடந்துகொள்கிறார்.

பாலியல் குற்றத்தை பொறுத்த வரை, இதில் ஒத்துழைப்பு இல்லாமல் குற்றம் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே. சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா என்று கேட்பது மாதிரி இனி நீ வெர்ஜினா என்றும் கேட்கவேண்டியிருக்குமோ என்ற சங்கடம் ஏற்படுகிறுது.

இந்த நிலை நீடித்தால் சினிமா மறுபடியும் நாடக காலத்திற்குச் சென்றுவிடும். ஆண்களே பெண்வேடம் போடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

தியாகராஜன், அர்ஜுன் ஆகியோர் பல ஆண்டுகாலமாகத் திரையுலகில் இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளால் அவர்களது புகழுக்குக் களங்கம் ஏற்படுவதுடன் அவர்கள் குடும்பத்தாரின் மனங்களும் புண்படும்,” என அவர் தெரிவித்தார்.

Leave a Response