சும்மா படம் எடுப்பது மட்டும் எங்கள் வேலையல்ல – புது டீமின் புது முயற்சி!

DSC_0009

சும்மா என்ற படத்தில் பணியாற்றும் குழுவினர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வை தலைமை தாங்கி நடத்துவது இதன் இயக்குனர் மதன். அவர் டாக்டர் ராஜ்சேகரின் தங்கை மகன் ஆவார். அவருடன் முரளி, பரணி, ஜெயன், மகேஷ், ஆகியோர் பயனம் செய்தார்கள்.

அது பற்றி இயக்குனரும் படத்தின் கதாநாயகனுமான மதன் கூறியதாவது, “நான் பார்வதிபுரம், கமனம் என்ற இரண்டு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். தற்போது சும்மா என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன். தயாளன் இசை அமைத்துள்ளார், ஜெய் ஒளிப்பதிவு செய்கிறார். இது காட்டிற்குள் நடக்கும் காமெடி படம்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். அப்பொழுது அங்கு காடுகள் நல்ல பசுமையாக இருந்தன. ஆனால் சிறிது நாட்கள் கழித்து அங்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது அங்கு காடுகள் கருகிய நிலையில் இருந்தன.

இதற்கு காரணம் உலகம் வெப்பமயமாகுதல். இதனால் நாங்கள்  இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று 46 நாட்களில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியா முழுவதும் 1100 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.

இந்த பயணம் சென்னையில் துவங்கி ஆந்திரா, புவனேஸ்வர், கல்கத்தா, பீகார், ஜார்கண்ட், கான்பூர், ஆக்ரா, டெல்லி, சண்டிகர், ஹிமாச்சல பிரதேசம் வழியாக கார்கில் அங்கிருந்து ஸ்ரீநகர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், பாம்பே, கோவா, கேரளா, கன்யாகுமரி, பாண்டிச்சேரி வழியாக சென்னை வரை மக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். அதை ஜனாதிபதியிடம் வழங்குவது தான் எங்கள் திட்டம் என்று கூறுகிறார் இயக்குனர் மதன்.

அடுத்த கட்டமாக தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுளார் படத்தின் இயக்குனரும் நடிகருமான மதன்.