சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெசண்ட் நகரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமல்லால் இந்தியா முழுவதுமே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், 17 பேரை கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெசண்ட் நகரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேசும்போது, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கவும், மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்திடவும் கோரிக்கை விடுத்தனர். பேச முடியாத ஒருசில மாணவிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அவர்கள் உடல் மொழி மூலம் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
இதனிடையே, சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி புழல் சிறையில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டுகள் ரோஹின்துரை மற்றும் கலைப்பொன்னி முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்.