அணைகளை பார்க்க வர ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு..!

கர்நாடகா வந்து அணைகளின் நீர்மட்டத்தை பார்த்துக் கொள்ளட்டும் என நடிகர் ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க உள்ளது. வரும் புதன்கிழமை முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்றதில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாநில தலைவர்கள் பலருக்கும் குமாரசாமி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினியையும் கர்நாடகா வருமாறு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அல்ல. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குமாரசாமி, “ ரஜினி, கர்நாடகா வந்து இங்குள்ள அணைகளின் நீர்மட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். தண்ணீர் போதுமானதாக இல்லை என்பது அவருக்கே தெரியும். ரஜினி அதனை புரிந்துகொள்வார்” என தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடகாவில் புதிதாக அமைய உள்ள அரசு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார்.

Leave a Response