ஆளுனரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்-தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநரும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விருதுநகர் தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கும் விதத்தில் பேசியுள்ள ஆடியோவில் ஆளுநர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

“அவர் தாத்தா இல்லை, அருகிலிருந்து வீடியோ எடுத்ததாக” பேராசிரியை நிர்மலா தேவி குறிப்பிட்ட ஆடியோவில் பேசியிருக்கிறார். பல்கலைக்கழக “மேலிடம்” என்பது ஆளுநரையே குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், முன்னெப்போதுமே இல்லாத வகையில், உடனடியாக அந்தப் பேராசிரியை கைது செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

கல்லூரிப் பேராசிரியை ஒரு கருவியாக செயல்பட்டிருப்பதை உணர்த்துவதாகவும் உள்ளது. எனவே, அவருடைய ஆடியோ பேச்சு குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த குற்றவியல் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். அதனால், தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response