கன்னியாகுமரி அருகே படகு பழுதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 10 பேர் மீட்பு

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் படகு பழுதாகி நின்ற தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி திரேஸ்புரம் சகாயம் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் அமலன், ஆரோக்கியராஜ், ஜூலியான்ஸ், சுரேஷ், கிளாட்வின், கென்னடி, ராபின்ஸ்டன், மிக்கேல்ராஜ், ஜேசுராஜ், ரீகன் உள்ளிட்ட 10 பேர் கடந்த 2ம் தேதி அதிகாலை திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடியிலிருந்து 85 நாட்டிகல் மைல் தொலைவில் கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் அவர்கள் 3ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் உள்ள இன்ஜின் பழுதாகி நின்று விட்டது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் தூத்துக்குடியிலுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் படகில் சென்று 10 பேரையும், பழுதான படகையும் மீட்டு நேற்று காலை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

Leave a Response