என் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகின்றனர்: வைகோ

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகின்றனர் என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்தபோது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினர் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆண்டிப்பட்டியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அச்சம்பவம் குறித்தும், சீமான் குறித்தும் பேசினார்.

அப்போது, “நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு பேரணியின்போது இருசக்கர வாகனங்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் என்னருகே வந்து ‘வீரவணக்கம்’ என முழக்கமிட்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் தமிழரல்ல எனவும் தெலுங்கர் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பொது மேடைகளில் பெரியாரையும், அண்ணாவையும் சீமான் இழிவாகப் பேசி வருகிறார். பல ஆண்டுகளாக இவற்றையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டே இருந்தேன்.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போடுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெறும் 8 நிமிடம் மட்டுமே தன்னைப் பார்க்க சீமானுக்கு அனுமதியளித்தார். ஆனால், பிரபாகரனுடன் வெகுகாலம் நட்பில் இருந்ததுபோல காட்டிக்கொள்கிறார் சீமான். பிரபாகரனுடன் சீமான் எடுத்ததாக உலா வரும் புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Leave a Response