50 முறை நடன ஒத்திகை-நடிகை தன்ஷிகா

கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த சாய் தன்ஷிகா தொடர்ந்து சோலோ, விழித்திரு, உரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கிட்னா, கலைக்கூத்து படங்களில் நடிப்பதுடன் முதன்முறையாக கதாசிரியர் கிரண் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இதுபற்றி தன்ஷிகா கூறியது: கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் சில ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஒரு சில நடிகைகளை மனதில் வைத்து திரைக்கதையும் அமைக்கிறார்கள். அதுபோல் எனக்கு வாய்ப்பு வர எவ்வளவு நாள் ஆகுமோ என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அந்த ஏக்கம் சமீபத்தில் நிறைவேறியது. டோலிவுட்டில் பல்வேறு படங்களுக்கு கதை அமைத்திருப்பவர் கிரண். இவர் என்னை சந்தித்து, ‘உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதை உருவாக்கியிருக்கிறேன். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார்.

கதைகேட்டதும் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருப்பதுடன் இப்படம் மூலம்தான் அவரும்  இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் எனக்கு ஜோடி கிடையாது. சூர்யா தேஜ் ஹீரோ. தவிர ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், மதுமிதா என தமிழ், தெலுங்கு இருமொழி நடிகர்களும் நடிக்கின்றனர்.

இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். நடன காட்சிகளுக்கும் முக்கியம் தரப்பட்டுள்ளதால் சந்திர கிரண் அமைத்த நடனத்துக்கு 50 முறை ரிகர்சல் எடுத்து ஆடியிருக்கிறேன். இவ்வாறு தன்ஷிகா கூறினார்.

Leave a Response