3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவர்..!

கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அடுத்த அச்சமங்கலம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு டிப்ளோமா மெக்கானிக்கல் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த ராகுல், கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மூன்றாவது மாடியில் குதித்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சக மாணவர்கள் காயமைந்த ராகுலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் தற்கொலை முயற்சியால் கல்லூரி வளாகமே பரபரப்படைந்தது. இதனை அடுத்து கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response