மாணவர் மரணம்: சாலைமறியலில் உறவினர்கள்

perambur

திரு.வி.க.நகர் 17 -ஆவது தெருவைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்தர் (15). இவர் பெரம்பூரில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். முரளி, காலை வழக்கம்போல் தனது மகனை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுச் சென்றார்.

இந்நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர், முரளியின் செல்லிடப்பேசிக்கு நரேந்தர் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய பள்ளி ஊழியர்கள், நரேந்தர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறினர். அங்கு மருத்துவர்கள், நரேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்ததைக் கேட்டு முரளி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘தனது மகன் நரேந்தர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறி, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் ‘டக்வாக்’ என்ற தண்டனையை வழங்கியதாகவும், இதற்காக பள்ளி மைதானத்தில் நரேந்தர் உட்கார்ந்த நிலையில் குதித்து ஓடியபோது மயங்கி விழுந்ததாகவும் தெரிகிறது.

நரேந்தர் இறப்புக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதனை மறைத்து மாணவன் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்ததாக பொய்யான தகவலை பள்ளி நிர்வாகம் தெரிவித்து காவல்துறையையும், மாணவனின் பெற்றோரையும் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. உறவினர்கள் காவல்துறையின் வார்த்தையை நம்பி சடலத்தை வாங்கிச்சென்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நரேந்திரனின் உறவினர்கள் மற்றும் அந்த பள்ளியில் படிக்கின்ற சக மாணவர்களின் பெற்றோர் திருவிக நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,

காவல் துறையினரோ, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக, மாணவன் நரேந்தர் இயற்கையாக உயிரிழந்ததாகவே சமாளித்து வந்தனர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கொந்தளித்தனர்.

இந்நிலையில், மாணவர் நரேந்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியரை கைது செய்யக்கோரியும் நரேந்திரன் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் காரணமாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 நிமிடம் தாமதமாக வருவது குற்றம் என்றால், அதற்கு தண்டனை வழங்கி குழந்தைகளை மன, உடல் ரீதியாக துன்புறுத்துவது பெருங்குற்றம் என்று சுட்டிகாட்டி வரும் நிலையில், மாணவர்களை துன்புறுத்தும் இத்தகைய பள்ளிகூடங்கள் மீது பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Leave a Response