அம்மாடியோவ்!! ஒரு ஹீரோவுக்கு பதினெட்டு கதாநாயகிகளா?

திரைப்பட கல்லூரி மாணவரும், கமலிடம் உதவி இயக்குனராக பயிற்சி  பெற்றவருமான ரவிதேவன் கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்கும் புதிய படம் ‘கவிதா முதல் கல்பனா வரை’. இவர் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்தவர்.

பாக்யராஜ் நடித்த மௌன கீதங்கள் படத்தில் அவரது மகன் வேடத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மனிதன் என பதினைந்து படங்களில் சிறு வயது ரஜினியாக நடித்திருக்கிறார். அதே போல கமலஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சிரஞ்சீவி, மிதுன் சக்ரவர்த்தி போன்ற நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 216 படங்களில் சிறுவனாக நடித்து புகழ் பெற்றவர். கேரளா அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இருமுறையும், மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இருமுறையும் பெற்றவர். தெலுங்கில் ஐந்து வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார்.

மாஸ்டர் சுரேஷ் இப்போது சூர்ய கிரண் என்ற பெயரில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘கவிதா முதல் கல்பனா வரை’ என்று பெயர் வைத்துள்ளனர். இவருக்கு ஜோடியாக பதினெட்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

ட்ரீம் வேல்டு சினிமாஸ் சார்பில் தலைவன் பட இயக்குனர்   டி.எஸ். ரமேஷ்செல்வன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர்  இசையமைக்கிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, அசோக் மேத்தா படத்தொகுப்பு செய்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பதினெட்டு பெண்கள் எப்படியெல்லாம்  பயணிக்கிறார்கள், அவர்கள் மூலமாக அவனின் வாழ்க்கையில் என்ன விதமான பதிப்புகள் உண்டாக்குகிறது என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கலகலப்பாக சொல்கிறது. இந்த படம்  மே மாதம் முதல் நாள் பாடல் பதிவுடன் தொடங்கும். மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.