நடிகையின் கதை என்ற பெயரில் பல கற்பனை கதைகள் படமாக வருவதுண்டு. ஆனால், ஒரு நடிகையின் உண்மையான வாழ்க்கை, ”நடிகையின் டைரி” என்ற பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த்திரையுலகில் தன் காந்தக் கண்களாலும், கட்டழகாலும் கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டு ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டிருந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் நிஜவாழ்க்கை பல சோகங்களையும், சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியது. இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட மோசமான முடிவு இன்னும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருக்கிறது.
சில்க்கை முதல் முறையாக மலையாளத் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி இந்த படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். மலையாளத் திரையுலகின் பிரபலமான இயக்குனரும், கதாசிரியருமான ஆண்டனி பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியதுடன், சிலுக்கின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.
அவர் கதை எழுதியிருப்பதாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூர் டென்னிஸின் பரபரப்பான திரைக்கதையில் உருவான இந்த படத்தை பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல இயக்குனர் அனில் உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார்.
இது அவருக்கு 38வது படம். இதில் நடிகையாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷனாகான். சிம்புவின் ”சிலம்பாட்டம்” நாயகியான இவர் ”வேர் இஸ் த பார்ட்டி… எங்க வூட்ல பார்ட்டி” பாடலுக்கு குத்தாட்டம் போட்டதன் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர். சல்மான்கானுடன் ”மென்டல்” என்ற இந்திப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷனாகான் ”நடிகையின் டைரி”யில் நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
அரவிந்த், சுரேஷ்கிருஷ்ணா, சுபின் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பென்ரி இன்னேஷியஸ் & எஸ்.பி.வெங்கடேஷ் ஆகியோர் இசையமைக்க, சஜித் மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.