ஒகி புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் வலுப்பெற்று புயலாக மாறியது. ஒகி எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்டது. புயலின் காரணமாக மாவட்டம் முழுவதும் மரங்கள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புயல் ஓய்ந்தது என கன்னியாகுமரி மக்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கன்னியாகுமரியில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. புயலால் குடியிருப்பு பகுதிகள் ஒருபுறம் சேதமடைந்திருந்தாலும் கடலுக்கும் சென்ற மீனவர்களின் நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர். பெரிய படகுகளில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். புயல் உருவாவதற்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு புயல் குறித்த எந்த அறிவிப்பும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடலில் புயல் ஏற்பட்ட பிறகே புயல் குறித்து உணர முடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர், ஒகி புயலால் இன்று வரை கரை திரும்பாமல் உள்ளனர். பல மாநிலங்களில் மீட்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களின் பட்டியல்களை அரசு வெளியிட்ட பிறகும், இதுவரை ஏராளமான மீனவர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். எனவே, காணாமல் போன மீனவர்களை ஆழ்கடல் பகுதிகளில் தேடி மீட்டுத்தர வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஒகி புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார். காலை 10:15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி செல்லும் முதல்வர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கிறது.




